1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (15:53 IST)

ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா - கைப்பட எழுதிய கடிதம்

மறைந்த முதலவர் ஜெயலலிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.


 

 
ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன் சினிமாவில் பிரபல நடிகையாக நடித்துக் கொண்டிருந்தார். 1980ம் வருடத்திற்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை.  அப்போது அவரது ஆர்வம் அரசியலில் கால் ஊன்றுவதாக இருந்தது.
 
இந்நிலையில், ஜெயலலிதா சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதாகவும், வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருப்பதாகவும் ஒரு மும்பை நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதைக் கண்ட ஜெயலலிதா அந்த செய்தி வெளியிட்ட ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார்.





 

 




அந்த கடிதத்தில் “நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படுவதாக நீங்கள் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது என எனக்கு புரியவில்லை.
 
உண்மையில், நடிப்பதற்கு பல நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. முக்கியமாக ரஜினியின்  ‘பில்லா ’படத்தில் கதாநாயகியாக நடிக்க எனக்கு தயாரிப்பாளர் பாலாஜி அழைத்தார். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். அதன்பின் அந்த படத்தில் நடிகை ஸ்ரீபிரியா நடித்தார்.
 
எல்லோருக்கும் தெரியும் பாலாஜி, தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர். மேலும், அந்த படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார். இருந்தும் நான் நடிக்க மறுத்தேன். நீங்கள் கூறுவது போல் எனக்கு உண்மையிலேயே பணப்பிரச்சனை இருந்திருந்தால் அந்த படத்தில் நான் நடித்திருப்பேன்.
 
தற்போது எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. உண்மையில், கடவுள் அருளால் பொருளாதார ரீதியாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே ஒரு ராணி போல் என்னுடைய வாழ்க்கையை என்னால் வாழ முடியும். நான் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறேன் எனில், கண்டிப்பாக எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமையவில்லை என்பதற்காக அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.