வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 15 அக்டோபர் 2014 (10:43 IST)

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையின்போது அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராகக் கூடாது: தேமுதிக மனு

ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராகக் கூடாது என்று தேமுதிக வக்கீல்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
தேமுதிக வக்கீல் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா,  சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு  தரப்பில் ஆஜராவதற்காக கர்நாடக அரசு மூத்த வழக்கறிஞர் பவானிசிங்கை நியமித்து அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் அவர், சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்த  பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மட்டுமே ஆஜராக வேண்டும். மேலும்,  ஜெயலலிதா ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தபோது, கர்நாடக அரசு உத்தரவின் அடிப்படையில் பவானிசிங்  ஆஜரானார். அவர், விசாரணையின்போது முதலில் ஜாமீனுக்கு எதிர்ப்பு  தெரிவித்தும், அதன் பின்னர் ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை  என்றும் இருவேறு கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். 
 
இது அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பி உள்ளது. இந்த  வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் பவானிசிங்குக்கு  கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு ஜெயலலிதா  உள்ளிட்ட 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. இந்த  மனு மீதான விசாரணையில் பவானிசிங் ஆஜராகக் கூடாது. அவரை  உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு எந்த ஆணையையும்  பிறப்பிக்கவில்லை. எனவே, அவர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக  அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.