வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 ஜூன் 2018 (16:15 IST)

மக்களுக்காகத்தான் அரசாங்கத்திற்காக இல்லை; அடித்து சொல்லும் ஜெயக்குமார்

சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள பசுமை வழி சாலை மக்களின் வசதிக்காகத்தான், அரசாங்கத்தின் நன்மைக்காக எந்த ஒரு திட்டம் போடுவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள 8 வழி பசுமை சாலைக்கு எதிராக சேலம மாவட்டம் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகம் முழுவதும் மக்கள் அனைவரும் பெரும்பாலும் இந்த பசுமை வழி சாலைக்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு ஏன் அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
ஆனால் தமிழக அரசு சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
 
நம்முடைய தமிழகம் வளர்ச்சிப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஈசிஆர் சாலை ஒரு வழிச்சாலையாக இருந்தபோது அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டது. அதை இரண்டு வழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்ட பின் விபத்து 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
 
மக்களின் வசதிக்காகத்தான் எந்த திட்டமும் போடப்படுகிறது. அரசாங்கத்தின் நன்மைக்காக எந்த ஒரு திட்டம் போடப்படுவதில்லை. இழப்பீடு தொகையும் 3 மடங்காக்கி அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.