1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (15:14 IST)

புஹாரி குழுமம் 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பா?

கருப்பு பணம் ஒழிப்பு, வரி ஏய்ப்பு போன்றவற்றை கண்டுபிடிக்க நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 76 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதில் சுமார் 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.


 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் பி.எஸ்.அப்துர் ரஹ்மானுக்கு சொந்தமானது, புஹாரி குழுமம். இந்நிறுவனம் கட்டுமானம், ரியல் எஸ்டேட், காப்பீடு, மின் உற்பத்தி இயந்திரங்கள் தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, கல்வி நிறுவனங்கள் உட்பட பல தொழில்களை செய்து வருகிறது.

இந்த குழுமத்துக்கு சொந்தமான வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், கிரசண்ட் பொறியியல் கல்லூரி, மீனம்பாக்கத்தில் உள்ள டிரான்ஸ் கார் ஷோரூம், நுங்கம்பாக்கத்தில் உள்ள புகாரி டவர், மயிலாப்பூர் சிட்டி சென்டர், அப்துல் காதீர் உறவினரின் சொகுசு பங்களா ஆகிய இடங்களில் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நேற்று நடந்த சோதனையில் புகாரி குழுமம் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இன்று புகாரி குழும நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததும், நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் வருமானவரித் துறையினர் 2 சூட்கேஸ்களில் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம், நகை கைப்பற்றப்பட்ட விபரம் குறித்து கேட்ட போது, எவ்வித தகவலும் தெரிவிக்க மறுத்து விட்டனர். 2 சூட்கேசுகளில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள், பணம், நகை இருக்கலாம் என கூறப்படுகிறது.