1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2017 (13:43 IST)

கார்டன் ரெய்டு - வருமான வரித்துறை பரபரப்பு விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தியது பற்றி வருமான வரித்துறையினர் இன்று விளக்கம் அளித்துள்ளனர்


 

 
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.  மேலும், போயஸ்கார்டன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.
 
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தினகரன் தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பை கிளப்பினர். இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
 

 
இந்நிலையில், இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறையினர் இன்று விளக்கம் அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 


 
ஜெ.வின் அறையில் நாங்கள் சோதனை செய்யவில்லை. ஜெ.வின் இல்லத்தில் சசிகலாவின் 4 அறைகள் மற்றும் பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை நடைபெற்றது. போயஸ் கார்டன் இல்லத்தின் 5 அறைகளின் சாவிகளும் இளவரசியின் மருமகனிடம் இருந்து பெறப்பட்டது. அங்கு கைப்பற்ற பென் டிரைவ் மற்றும் லேப்டார் ஆகியவற்றில் ஆய்வு நடந்து வருகிறது.
 
உறுதியான தகவல் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலும், வரி ஏய்ப்பு குறித்து உளவுத்துறை மூலம் தகவல் பெற்ற பின்பே இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது. இதில், 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 15க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
 
தமிழக போலீசாரின் உதவியே போதுமானதாக இருந்ததால், ராணுவ போலீசாரை அழைக்கவில்லை. தேவையென்றால் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்துவோம். சோதனை தொடர்பாக பல தரப்பட்ட விசாரணை நடந்து வருகிறது” என அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.