வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (05:42 IST)

வைகோ இல்லாதது வருத்தம் அளிக்கிறது: திருமாவளவன் உருக்கம்

மேடையில் வைகோ இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. மோடியின் கொள்கையால் வைகோவுடனான நட்பில் விரிசல் உண்டாகி விட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


 

மத்திய அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு புதுச்சேரி துறைமுக மைதானத்தில் புதனன்று நடைபெற்றது.

.மாநாட்டுக்கு தலைமை தாங்கி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், “கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தையும் மீறி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

மக்கள் நலக்கூட்டியக்கம் உருவாகும் போதே இது நீடிக்காது என பலர் வதந்தியை பரப்பினர். நாங்கள் தொடர்ந்து அப்போது ஒற்றுமையை நிலைநிறுத்தி வந்தோம். இந்த மேடையில் வைகோ இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

மோடியின் இந்த அறிவிப்பால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் உடனான நட்பு தொடர்ந்து வருகிறது. மோடியின் கொள்கையால் வைகோவுடனான நட்பில் விரிசல் உண்டாகி விட்டது. தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும் இக்கூட்டியக்கம் அமைக்கப்படவில்லை. இந்த இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக வழிநடத்திச் செல்லும்” என்று கூறியுள்ளார்.