1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (17:53 IST)

ஜெயலலிதா திட்டாமல் நாகரிகமான முறையில் பதிலளிக்க தயாரா? - கருணாநிதி கேள்வி

ஜெயலலிதா, அவருடைய அமைச்சர்களை விட்டு குறை சொல்பவர்களை நாராசமாக திட்டாமல், நாகரிகமான முறையில் உரிய பதிலளிக்க முன்வரத் தயாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாக முயற்சி செய்தும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று குறிப்பாகச் சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயலும், பொன்.ராதாகிருஷ்ணனும் வெளிப்படையாகக் கடுமையாகக் குற்றஞ்சாட்டி கருத்துகளை தெரிவித்த பிறகும், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரடியாக அதற்கு எந்தவிதமான பதிலும் கூறாமல், இரண்டு அமைச்சர்கள் ஏதோ பதில் கூற வேண்டு மென்பதற்காக மழுப்பலாக அறிக்கை கொடுத்தார்கள். 
 
தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான ஜவடேகர் தமிழக அரசின் மீதும், முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகச் சுமத்தியிருக்கிறார். 
 
குறிப்பாக அவர் கூறும்போது, “மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை” என்று தெரிவித்திருப்பது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு அல்ல; தமிழக அரசின் மீது நேரடியாகவே சாட்டியுள்ள குற்றச்சாட்டு. இதற்கு முதல்வர் ஜெயலலிதா உரிய பதில் கூறியே ஆக வேண்டும்; மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தவோ, நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பதைத் தவிர்த்திடவோ கூடாது.
 
மத்திய அமைச்சர் மேலும் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக அதைச் சுற்றியுள்ள தமிழகம் உள்பட 7 மாநிலங்களின் அறிக்கை கேட்கப்பட்டது. இதில் 6 மாநிலங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. 
 
ஆனால் தமிழக அரசு மட்டும் இதுவரை எந்தவிதமான அறிக்கையும், பதிலும் அளிக்கவில்லை. நான் நூற்றுக்கும் மேற்பட்ட முறை தமிழக முதல்வரைச் சந்திக்க முயன்றும், சந்திக்க முடியவில்லை” என்றெல்லாம் தெரிவித்திருப்பது சாதாரணமான குற்றச்சாட்டு அல்ல; தமிழக அரசின் மீதும், முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு.
 
மத்திய அமைச்சர் ஜவடேகர் தனது பேட்டியில் தொடர்ந்து கூறும்போது, “தமிழக மின் வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் திருட்டு அதிகரித்து வருகிறது.  அப்படி இருந்தும் தமிழகத்தில் மின்சாரத் துறையை நட்டத்திலிருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் மத்திய அரசின் “உதய்” எனும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை. இத்திட்டத்தைப் பின்பற்றும் மற்ற மாநிலங்கள் நல்ல பலனைப்பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களில் செயல் படுத்தியதன் மூலம் 1.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கிடைத்துள்ளது.   ஆனால், தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. நியாயமான நுகர் வோர் பயன்பெறுவதைத் தமிழக அரசு விரும்பவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார்.
 
மேலும் மத்திய அமைச்சர் கூறும்போது, “மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 100 ரூபாய் விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்குகிறது. அப்படி இருந்தும் தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக வெளி மார்க்கெட்டில் எல்.இ.டி. பல்புகளைத் தமிழக அரசு வாங்கி வருகிறது. இதிலிருந்து தமிழக அரசு அதிக விலைக்கு விற்பவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என்பது நிரூபணமாகியுள்ளது” என்றும் ஆதாரபூர்வமாக தமிழக அரசின் மீது ஊழல் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
 
இவ்வாறு மத்திய அமைச்சர்களாலும், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பத்திரிகா தர்மத்தைக் காப்பாற்றி வரும் சில ஏடுகளாலும், மின்சாரத்துறை குறித்து மட்டும் அதிமுக அரசு மீது இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்களோடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. 
 
தன் மீதும், தமிழக அரசின் மீதும் சாட்டப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூற வேண்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, அவரிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கும் மக்கள் மன்றத்தின் முன் என்ன பதில் கூறப்போகிறார்? 
 
மத்திய அமைச்சர்களைச் சந்திக்கவே நேரம் கொடுக்க முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுத்தேர்தல் வரவிருக்கின்ற இந்த முக்கியமான நேரத்திலாவது விழித்துக் கொண்டு, அவருடைய அமைச்சர்களை விட்டு குறை சொல்பவர்களை நாராசமாக திட்டாமல், நாகரிகமான முறையில் உரிய பதிலளிக்க முன்வரத் தயாரா?” என்று கூறியுள்ளார்.