வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 6 ஜனவரி 2019 (16:52 IST)

திருவாருர் தேர்தல் ஒத்திவைப்பு முயற்சி – பின்னணியில் திமுக வா ?

திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்தி வைப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பின்னணியில் திமுக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக, அமமுக ஆகியப் பெரியக் கட்சிகளும் நாம் தமிழர் கட்சியும் அறிவித்துள்ளன. இந்நிலையில் ’கஜாப் புயல் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையான முடியாதக் காரணங்களால் இப்போது தேர்தல் நடத்தினால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும்’ என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை ஜனவரி 7 (நாளை) நடக்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தேர்தல் ஆணையரையும் சந்தித்து இது சம்மந்தமாகப் பேசியுள்ளார். அதனால் அறிவிக்கப்பட்ட நாளில் திருவாரூரில் தேர்தல் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இடைத்தேர்தலில் திமுக வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் இந்தத் தேர்தல் நிறுத்த முயற்சி அரசியல் வட்டாரத்தில் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, டி ராஜா வின் இந்த தேர்தல் நிறுத்த முயற்சிக்குப் பின்னால் இருப்பது திமுக தான் என்றக் கருத்து அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக அமமுக வின் துணைப்பொதுச் செயலாளர் தினகரனும் தேர்தலைக் கண்டு அதிமுக வைப் போல திமுக வும் பயப்படுகிறது.  அதனால்தான் தேர்தலை நிறுத்த டி ராஜாவை ஏவிவிடுகிறது.’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஸ்டாலின் ’ நான் பயந்து கொண்டிருப்பதாக தினகரன் கூறுகிறார். அவர் மேல் உள்ள பெரா வழக்கு, சிபிஐ விசாரணை, அமலாக்கத் துறை வழக்கு, சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கு ஆகியவற்றிற்காக அவர்தான் பயப்படவேண்டும். அவரை ஆர் கே நகரில் தினகரன் எம்.எல்.ஏ. என்று யாரும் அழைப்பதில்லை. 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கின்றனர்’ எனக் கூறினார்.