1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (13:29 IST)

பிக்பாஸ் சர்ச்சை ; கமல்ஹாசன் வீட்டின் முன்பு போராட்டம் : போலீசார் குவிப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்பு, இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே இதன் மீதான விமர்சனம் அதிகரித்தவாறே உள்ளது. இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம். 
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஆபாச நிகழ்ச்சி எனவும், இதில் ஆபாச வார்த்தைகளை பேசுகின்றனர். 75 சதவீதம் நிர்வாணமாக நடித்து வருகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை கிண்டலடித்துள்ளார்கள் என இந்து மக்கள் கட்சி புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிக்கும் ஆபாச நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர். 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்  “கைதாவது பற்றி கவலையில்லை.  இந்த புகார்கள் மலிவானவை. கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் நடனம் ஆடுகிறார்கள். சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்கும் போது சியர்லீடர்ஸ் நடனம் ஆடுகிறார்கள். அவர்களை எல்லாம் கைது செய்வீர்களா?. என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நான் ஒரு கம்யூனிஸ்ட் என இந்துத்துவா அமைப்புகள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றன. நான் ஒரு பகுத்தறிவுவாதி. உலகுடன் ஒத்துப்போகும் எந்த விஷயத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்” என அவர் கூறினார்.
 
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்பு இன்று காலை இந்து மக்கள் கட்சியினர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக அவர்கள் கோஷங்களும் எழுப்பினார். இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.