வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2017 (11:18 IST)

இதை செய்தால் உடனே வெளியேறுகிறோம் - மெரினாவில் போராட்டக்காரர்கள் பேட்டி

இன்னும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை மெரினா கடற்கரையில் கலையாமல் அங்கேயே இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.


 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.   
 
இந்நிலையில், நேற்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.  சென்னையின் திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். 
 
போரட்டத்தின் முக்கிய களமாக திகழ்ந்த சென்னை மெரினா கடற்கரையின், விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக கூடியிருந்த லட்சக்கணக்கான போராட்டக்காரர்களில், பெரும்பாலானோர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நேற்று அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.
 
ஆனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் திருவல்லிக்கேனி, ஆயிரம் விளக்கு, பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் ஆகியோர் இன்னமும் மெரினா கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அவர்கள் நேற்று நள்ளிரவு சில செய்தியாளர்களிடம் கூறுகையில் “எங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால், இந்த அவசர சட்டத்தை அட்டவணை 9ல் சேர்த்தால்தான், மீண்டும் யாரும் வழக்கு தொடர முடியாது என நீதிபதி அரிபரந்தாமன் நேற்று கூறினார். எனவே, அவசர சட்டத்தை அட்டவணை 9ல் சேர்ப்பேன் என முதலமைச்சர் ஓ.பி.எஸ் கூறினால், அடுத்த 5 நிமிடத்தில், போரட்டத்தை கைவிட்டு இங்கிருந்து எல்லோரும் கிளம்பிச் செல்ல தயாராக இருக்கின்றோம்” என அவர்கள் கூறினர்.