1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (11:02 IST)

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓபிஎஸ் சூளுரை!

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓபிஎஸ் சூளுரை!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க உள்ளதாக கூறியுள்ளார்.


 
 
இத்தனை காலம் அமைதியாக சாதுவாக இருந்து வந்த ஓபிஎஸ் நேற்று இரவு ஒரு வழியாக பொங்கி எழுந்து வெடித்து சிதறிவிட்டார். சசிகலா கும்பலுக்கு எதிராக முதன் முதலாக ஊடகத்தின் முன்னர் பேசினார். தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக ஒட்டுமொத்த உண்மையையும் போட்டுடைத்தார்.
 
மேலும் மக்கள் விரும்பினால் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவேன் என்றார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை தனது இல்லத்தில் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதற்கான கட்டாயம் ஏற்பட்டால் கண்டிப்பாக திரும்ப பெறுவேன் என்றார்.
 
மேலும், அதிமுகவிற்கு எந்த நேரத்திலும் தான் துரோகம் செய்யவில்லை எனவும், சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கூறினார். என்னை பாஜக இயக்குகிறது என்பது பொய். சட்டமன்றம் கூடும் போது என் ஆதரவு எம்எல்ஏக்கள் அவர்களுக்கு தெரியும். ஜெயலலிதா மரணம் பற்றி குறித்து நீதி விசாரணை கமிஷம் அமைக்கப்படும்.
 
விசாரணை முடிவில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும். பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறைப்படி விரைவில் நடைபெற வேண்டும். பொதுமக்களை சந்தித்து பேசுவேன். ஆளுநர் வித்யாசாகர் ராவை விரைவில் சந்திப்பேன் இந்த நிலைப்பாட்டில் இருந்து நான் பின்வாங்கமாட்டேன் என்றார் ஓபிஎஸ்.