1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (20:46 IST)

'நான் பல்வேறு போராட்டங்களை சந்தித்தேன்' - முதல் திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாசினி

உதவி ஆய்வாளர் பணியை பெறுவதற்கு நான் பல்வேறு போராட்டங்களை சந்தித்தேன் என்று உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பிரித்திகா யாசினி கூறியுள்ளார்.
 

 
சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி ‘யங் இந்தியா–20’ என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 20 பேருக்கு பாட கையேடுகளுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், தற்போது திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டம் விரிவாக்கப்பட்டு உள்ளது.
 
இந்த திட்டத்தின் தொடக்க விழா ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடைபெற்றது. விழாவில், காவல்துறை உதவி ஆய்வாளராக பணி நியமனம் பெற்றுள்ள இந்தியாவின் முதல் திருநங்கை பிரித்திகா யாசினி கலந்துகொண்டார்.
 
அப்போது பேசிய பிரித்திகா யாசினி, "நான் போலீஸ் துறையில் சப்–இன்ஸ்பெக்டராக பணியை பெற்றது திருநங்கை சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த வெற்றியை பெற நான் பல்வேறு போராட்டங்களை சந்தித்தேன்.
 
இந்த பணியை பெற 5 முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதில் 5 முறையில் எனக்கு தீர்ப்பு கிடைத்து வெற்றி பெற்றேன். கடந்த 6ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியுள்ளது.
 
இதில் காவல்துறை பணிக்குசேர ஆண், பெண் இனத்தை போல் திருநங்கை இனத்தையும் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
 
இந்த தீர்ப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாதும். என்னை போல் வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்" என்று கூறியுள்ளார்.