1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 30 ஜூன் 2016 (19:00 IST)

என்னால் திமுக தோற்றதா? நான் அப்படி சொல்லவில்லை - வைகோ பல்டி

தனது ராஜ தந்திரத்தால் தான் கடந்த தேர்தலில் திமுக தோற்றது என்று தான் கூறவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

 
நேற்று திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடியில், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
அப்போது அவர், “என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது” என்று கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அணி. அதில் இணைந்து போட்டியிட்டவர்கள் தற்போது வெளியேறுவது அவர்களது உரிமை. அதே வேலையில் அரசியல் ரீதியாக நல்ல நட்பும் நேசமும் தேமுதிகவுடனும் தமாகாவுடனும் நீடிப்பதாகவும் கூறியுள்ளார்.
 
திமுகவின் தோல்விக்கு தான் காரணம் என்று வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கேட்டதற்கு, ”அப்படி சொல்லவில்லை. ராஜதந்திரத்தில் மிகவும் திறமையானவர் கலைஞர். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு விதமான முடிவு எடுக்கிறார்.
 
அவர் அளவிற்கு தனக்கு ராஜதந்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார். ஒருபோதும் மதிமுகவை அழிக்கவிடமாட்டேன் என தான் சொன்னதாகவும், ஆனால் பத்திரிக்கைகளில் செய்திகள் திருத்தி தவறாக வெளியிடப்பட்டுள்ளது” என வைகோ தெரிவித்துள்ளார்.