வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (10:34 IST)

'மதிமுக'வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி - கருணாநிதி

'மதிமுக'வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியாக வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
இன்று காலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி கூறியதாவது, "வைகோ எனது எதிரி அல்ல நீண்ட கால நண்பர். மதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் அதை வரவேற்பேன். கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே. கூட்டணிக்கு பாமக வர விரும்பினால், அது குறித்து திமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பாமக தலைவரின் முன்னிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ சந்தித்துப் பேசிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாகக் கூடும் என்ற யூகங்களை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “வைகோவுடன் நடந்த சந்திப்பு நட்பு ரீதியானது” என்றார். “இதனை புதிய கூட்டணிக்கான சந்திப்பாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உங்கள் விருப்பம் அதுதான் என்றால், அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.
 
“கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சியே” என்று ஸ்டாலின் கூறியது பற்றி வைகோவின் கருத்தை கேட்ட போது, “ஸ்டாலின் அவ்வாறு விரும்பினால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.
 
இந்நிலையில், வைகோ, ஸ்டாலின் கருத்துகளை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் மதிமுக - திமுக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே என திமுக தலைவர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார்.