1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2017 (14:39 IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் அணி திரள ஆரம்பித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள உள்ள இந்த திட்டம் விவசாயத்தை அடியோடு அழித்துவிடும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


 
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் எப்படி வெகுண்டெழுந்து ஒரு அறப்போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்களோ அதே போல இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்தும் இந்த போராட்டத்துக்கு மக்கள், இளைஞர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
 
போராட்டத்தின் தீவிரத்தன்மையை அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
 
இந்நிலையில் இன்று டெல்லி சென்று பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திக்க இருக்கும் நிதியமைச்சர் ஜெயக்குமார் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.
 
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் ஹைட்ரோ கார்பன் திட்டமானது விவசாயத்தை பாதிக்காத வண்ணம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு பின்னர் செயல்படுத்தப்படும். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கக்கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.