வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (10:48 IST)

நாய்குட்டியால் வந்த சண்டை: சாத்தூர் அருகே கணவன்–மனைவி அடித்துக்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணவன்-மனைவி ஆகியோரை ஒரு கும்பல் கம்பியால் அடித்து கொடூரமாகக் கொலை செய்தனர்.
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் பூக்கடை நடத்தி வந்தவர் முத்துராஜ் இவருக்கு வயது45. இவர் அருகே உள்ள தெற்கு அப்பணம்பட்டியில் மனைவி முத்துலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இவர்களது வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தனர். அதனை கீழமுத்தாண்டியாபுரத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் 18 வயது வாலிபர் பொன்வசந்த் எடுத்துச்  சென்றுள்ளார். இது குறித்து முத்தாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் திருமுருகனிடம் நாய் வளர்த்த முத்துலட்சுமி புகார் செய்தார். அவர் பொன் வசந்தை கண்டித்து நாயை வாங்கி கொடுத்து விட்டார்.
 
இந்த செயல் பொன் வசந்த்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முத்து ராஜ் – முத்துலட்சுமி தம்பதியரை பழிதீர்க்க திட்டமிட்டார். இதற்காக நண்பர்கள் அருண்குமார், வினோத், முத்துபாண்டியன் ஆகியோரை சேர்த்துக் கொண்டார்.
 
இவர்கள் பூக்கடையை அடைத்துவிட்டு முத்துராஜ் தம்பதியர் வீட்டுக்கு புறப்பட்டதைப் பார்த்து முத்துப் பாண்டியன் மற்றும் வினோத், பொன்வசந்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் அருண்குமாருடன் தெற்கு அப்பணம்பட்டி விலக்கில் இருட்டான பகுதியில் மறைந்திருந்துள்ளார்.
 
முத்துராஜ் தம்பதியர் அங்கு வந்தபோது அவர்களை வழிமறித்து இரும்புக் கம்பியால் இருவரும் தாக்கியுள்ளனர். இதில் முத்துராஜூம் அவரது மனைவி முத்துலட்சுமியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டனர்.
 
இது குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பொன்வசந்த் உள்பட 4 பேர் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
இதைத்  தொடர்ந்து பொன் வசந்த், அருண்குமார், வினோத், முத்துப்பாண்டியன் ஆகியோரை ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.