செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (15:06 IST)

நடிகை சசிரேகா கொலையில் துப்பு துலக்கியது ஏப்படி? : ஆச்சர்ய தகவல்

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சசிரேகா கொலை வழக்கில், போலிசார் எப்படி குற்றவாளியை கண்டுபிடித்தார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


 

 
கடந்த மாதம் ஜனவரி 5ஆம் தேதி, சென்னை போரூர்-மவுண்ட் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில், 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தலை துண்டிக்கப்பட்ட உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சிடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலை கைப்பற்றினர். நிர்வாணமாக கிடந்த அவரது உடலில் போர்வை மட்டும் சுற்றப்பட்டு இருந்தது. அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
 
கொலை செய்யப்பட்டுக்கிடந்த அந்த பெண், போரூரை அடுத்த மதனந்த புரத்தை சேர்ந்த சசிரேகா(32) என்பது தற்போது தெரிய வந்துள்ளது. விசாரணையில் கடைசியாக, அவர் குடும்ப பிரச்சனை காரணமாக, தன்னுடைய கணவர் ரமேஷ்சங்ககர் மீது மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன் பின் அவரைப் பற்றிய தகவல் இல்லை.
 
விரைந்து செயல்பட்ட போலீசார், அவரது கணவர் ரமேஷ்சங்கர் மற்றும் அவரது கள்ளக்காதலி லக்கியா(30) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்ததுதான் சசிரேகாவை கொலை செய்தார்கள் என்பது தெரிய வந்தது.
 
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவரும் ரமேஷ் சங்கர் “ நாளை முதல் குடிக்க மாட்டேன்” என்ற படத்தில் நடித்துள்ளார். அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து, சசிரேகாவை 2வது திருமணம் செய்துள்ளார். சசிரேகாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர்கள் மடிப்பாக்கத்தில் வசித்து வந்தனர். ரமேஷ்குமார் நடித்த படத்தில் சசிரேகாவும் நடித்துள்ளார்.
 
இதனிடையில், ரமேஷுக்கு கேரளாவை சேர்ந்த ஒரு துணை நடிகையோடு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.  ஜனவரி 4ஆம் தேதி அந்த துணை நடிகையை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளர் ரமேஷ். அப்போது ஏற்பட்ட சண்டையில், ரமேஷ் சசிரேகாவை அடிக்க அவர் தரையில் விழுந்து, தலையில் அடிபட்டு அங்கேயே இறந்து விட்டார்.
 
எனவே அந்த கொலையை மறைக்க திட்டமிட்ட ரமேஷும், அவரின் கள்ளக்காதலியும், சசிரேகாவின் கழுத்தை அறுத்து,  கொளப்பாக்கம் அருகே உள்ள ஒரு கால்வாயில் வீசினர். உடலை ஒரு துணியால் சுற்றி போரூரில் வீசிவிட்டனர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து ரமேஷ், லக்கியா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளார்கள்.
 
சசிரேகா கொலையில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். ஏனேனில் தலையில்லாமல் முண்டமாகத்தான் அவரது உடல் மீட்கப்பட்டது. அதனால், அந்த உடல் யாருடையது என்பதை கண்டுபிடிப்பது போலிசாருக்கு சிரமமாக இருந்தது. 
 
அந்நிலையில், அந்த உடலை மடிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் பார்வையிட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணின் கையில் ஒரு சூடு போட்ட தழும்பு இருந்தது. மேலும், அவரது காலின் கட்டை விரல் நீண்டு இருந்தது. அவற்றை அவர் எங்கோ, எந்த பெண்ணிடமோ பார்த்தது போல் இருந்தது.
 
கடைசியில், தன் கணவர் மீது புகார் கொடுக்க, சசிரேகா மடிப்பாக்கம் காவல் நிலையம் வந்தபோது, அய்யப்பன் அவரின் உடலில் இதையெல்லாம் பார்த்துள்ளார். கையில் இருந்த தழும்பை பற்றி அவர் சசிரேகாவிடம் விசாரித்த போது, மஞ்சள் காமாலை காரணமாக சூடு போட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
மேலும், அவரது காலின் கட்டை விரல் நீண்டு இருப்பதையும் அய்யப்பன் பார்த்துள்ளார். அதை வைத்தே போலிசார் இந்த வழக்கில் துப்பு துலக்கி ரமேஷ் சங்கர்தான் கொலையாளி என்பதை கண்டுபிடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.