வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (15:38 IST)

தஞ்சை கோயில் ஆன்மீக நிகழ்ச்சி – உயர்நீதிமன்றம் தடை !

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் வாழும் கலை அமைப்பினர் சார்பில் நடக்க இருந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இன்று தஞ்சாவூர் பெரியக் கோயிலில் வாழும் கலை அமைப்பினர் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடக்க இருப்பதாக இருந்தது. அதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் கலந்துகொள்ளவும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று விசாரணையில் ஈடுபட்டது.

அப்போது வெங்கட் சார்பில் ‘வாழும் கலை அமைப்பினர் ஒருங்கிணைக்கும் ஆன்மிக நிகழ்ச்சி இரண்டு நாட்கள் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் அருகே பெரிய பந்தல் போட்டுள்ளனர். பெரிய கோவில் பழமையும், பாரம்பரியமும் மிக்க கோவில். யுனெஸ்கோ அங்கிகாரம் பெற்ற புராதனக் கோயில். அதனால்  தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை குறைக்கும் நடவடிக்கையாக இருக்கும். மேலும் இந்த அமைப்பினர் கடந்த ஆண்டு யமுனை ஆற்றங்கரையில் நடத்திய நிகழ்ச்சியால் நதி மாசு ஏற்பட்டதாக பசுமைத் தீர்ப்பாயம் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதனால் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்த அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதித்துள்ளனர். மேலும் கோயிலின் அருகே போடப்பட்டுள்ள பந்தலையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.