செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (08:15 IST)

முதலாளியால் கை வெட்டப்பட்ட பெண் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சவூதி அரேபியாவில், முதலாளியால் கை வெட்டப்பட்ட பெண் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
 
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்ற வேலூர் மாவட்டம், மூங்கலேறி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் கையை அவர் பணிபுரிந்த வீட்டு முதலாளி வெட்டிய சம்பவம் மிகவும் கொடுமையானது. கண்டனத்துக்குரியது.
 
வேலை வாய்ப்பு தேடி கடல் கடந்து செல்லும் எண்ணற்ற தொழிலாளர்கள் இவ்வாறு அவர்கள் அங்கு பணி அமர்த்தப்பட்ட இடங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
அப்பாவிகளான அவர்களை மீட்டு நாடு திரும்ப வேண்டிய உதவிகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறேன். அந்த நடவடிக்கையையொட்டி சவுதி அரேபியாவில் கை வெட்டப்பட்ட கஸ்தூரி பற்றிய செய்தியை அறிந்ததும் தாய்நாடு திரும்ப உரிய அத்தனை செயல்பாடுகளையும் விரைவுபடுத்தியிருக்கிறேன்.
 
மேலும் தனது பணியாளரை பட்டினிப்போட்டு துன்புறுத்தியது மட்டுமின்றி அதுபற்றி புகார் தெரிவித்ததால் கையை வெட்டிய குற்றத்திற்காக, மேற்படியார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென கேட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.