வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (04:55 IST)

முதலமைச்சர் ஒரு கொலைகாரர்: எச்.ராஜா பகிரங்க குற்றச்சாட்டு

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில் நேற்று அவர் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களை கொலைகாரர் என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
சேலத்தில் நடந்த பாஜக செயற்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, ''கடந்த ஜூலை 30-ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநில பிரதிநிதிகளும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில்தான் பொருள்களின் விலைகளை தீர்மானித்திருக்கிறார்கள். ஒரு சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மத்திய அரசை விமர்சிக்கிறார்கள். கடந்த 29-ம் தேதி மத்திய அரசோடு விவசாயிகள் விவசாயப் பொருள்களுக்கு 12 சதவிகிதமாக இருக்கும் வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதையடுத்து, மத்திய அரசும் அந்த கோரிக்கையை ஏற்று விவசாயப் பொருள்களுக்கு 5 சதவிகித வரியாக குறைத்துள்ளது.
 
ஜிஎஸ்டியை முறையான ஆய்வுகள் செய்து வரையறுத்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பெட்ரோல், ஆல்கஹால் போன்றவைகளுக்கு வரி விதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்காலிகமாக அதற்கு வரி விதிக்கவில்லை. ஜிஎஸ்டி.க்கு முன்பு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு பொருள்கள் கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மிகுந்த தாமதம் ஏற்படும். அதாவது காஷ்மீர் டூ கன்னியாகுமரிக்கு கன்டைனர் லாரியில் 30 நாள்கள் வர வேண்டி இருந்தது. ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. தற்போது எந்த சுங்கச் சாவடியிலும் நிற்காமல் நேராக வருவதால் இனி 10 நாள்களிலேயே சரக்கு வந்துவிட முடியும்.
 
மத்திய அரசின் அறிவிப்புகளை சரியாக புரிந்துகொண்டு செயல்படத் தெரியாத செயல் தலைவர் ஸ்டாலின் கேடுகெட்ட அரசியல் நடத்துகிறார். அவர் இந்து மதத்தின் துரோகி. அவர் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு அவரின் ஜாதகத்திலேயே இல்லை. ஒருவேளை முதல்வரானால் தமிழ்நாடு சீரழிந்துவிடும்.
 
ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் வழக்கு விசாரணைக்கே வரவில்லை. ஆளும் அ.தி.மு.க. அரசு கையாளாகாத அரசு. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பல இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த முதல்வர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் 13 கொலைகள் செய்த கொலைகாரர்' 
 
இவ்வாறு எச்.ராஜா பேசினார்