செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (16:31 IST)

கேள்வி கேட்டாலே தேசத்துரோகி பட்டம் கொடுக்கும் ஹெச்.ராஜா...

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி பற்றி கேள்வி எழுப்பிய ஒரு நிருபரை, தேசத்திற்கு எதிரானவர் என பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
புதுக்கோட்டையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக பிரமுகர் ஹெச். ராஜா கலந்து கொண்டு, நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
 
அப்போது, டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை இதுவரை மோடி சந்திக்காதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஹெச்.ராஜா, வெள்ளைக்காரி இத்தாலி சோனியா தலைமையில் 10 வருடம் ஆட்சி நடைபெற்ற போது,  இவ்வளவு போராட்டம் நடைபெறவில்லை. ஏனெனில், அவர்களை கண்டு பயம். ஆனால், மோடி போல் ஒரு இந்தியன் பிரதமராகி விட்டால், ஏராளமான போராட்டம் நடத்துகிறார்கள் என காட்டமாக விமர்சித்தார்.
 
அதேபோல், தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு ரூ,1748 கோடியை நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியது. இதுபற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள், வேறு நாடான கென்யாவின் விவசாய வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ. 700 கோடி நிதி உதவி அளிக்கும் போது தமிழகத்திற்கு இவ்வளவுதான் கொடுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், எங்கள் வரிப்பணத்தை எங்களுக்கு கொடுப்பதில் ஏன் எந்த பாரபட்சம் என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஹெச்.ராஜா, உங்கள் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. நீங்கள் ஒரு தேசத் துரோகி. இதுவரை நீங்கள் எவ்வளவு வரி கட்டியுள்ளீர்கள் எனக் கூறுங்கள். நான் உங்களுக்கு தருகிறேன். நீங்கள் தேசத்திற்கு எதிரானவர் என கூறினார். இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.