வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (19:48 IST)

சங்கராச்சாரியார் எழுந்து நிற்காததை கருணாநிதியுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தும் குருமூர்த்தி!

நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்துவிட்டு தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றார்.
 
இதனால் சங்கராச்சாரியார் திட்டமிட்டு வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார். இது தமிழன்னையையும், ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் அவமதிப்பதாகும் என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால் பாஜகவின் எச்.ராஜா, துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் சங்கராச்சாரியார் எழுந்து நிற்காததற்கு எந்த பதிலையும் கூறாமல் அதனை நியாயப்படுத்தும் விதமாக 2010-ஆம் ஆண்டு நடந்த தமிழ் மாநாட்டில் அப்போதையை முதல்வர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

 
2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதாவது அந்த மாநாடு 2010-ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கருணாநிதி 2007-ஆம் ஆண்டே நடக்க முடியாமல் சக்கர வண்டியில் பயணிக்க தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வீடியோவை வெளியிட்டு எழுந்திருக்க முடியாமல் இருக்கும் கருணாநிதியுடன் நலமாக இருக்கும் விஜயேந்திரரின் செயலை ஒப்பிட்டு அதனை நியாயப்படுத்தும் பாஜகவின் எச்.ராஜாவையும், துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தியையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.