1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (08:33 IST)

விழுப்புரம் வயல்களில் திரிந்த வெட்டுக்கிளிகள்! – விவசாயிகள் அதிர்ச்சி!

வட இந்தியாவில் வெட்டுகிளிகள் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் விழுப்புரம் விவசாய பகுதியில் வெட்டுக்கிளிகள் நடமாட்டம் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பாலைவன வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக வட இந்திய பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை துவம்சம் செய்து வருகின்றன. அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவை தமிழகம் வந்துவிடுமோ என தமிழக விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செஞ்சி பொன்பத்தி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் நிறைய வெட்டுக்கிளிகள் தென்பட்டுள்ளன. அவை பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்குமோ என்று பயந்த விவசாயிகள் இதுகுறித்து வேளாண் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நேரில் சென்று விவசாயப்பகுதிகளை ஆய்வு செய்த வேளாண்மை அறிவியல் நிலைய ஆய்வாளர்கள் ”இது வட இந்தியாவில் காணப்படும் வெட்டுக்கிளிகள் அல்ல. வயல்வெளிகளில் திரியும் சாதாரண வெட்டுக்கிளிகளே!” என்று விளக்கம் அளித்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு சந்தேகம் இருந்தால் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.