1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 30 ஜூலை 2016 (12:24 IST)

ஜெயலலிதாவின் நெற்றியில் பொட்டு வைத்த பாசப்பின்னணி: யார் இவர்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு நெருங்க முடியாத தலைவர் என பரவலாக கருத்து உண்டு. முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பது என்றாலே அது வரம் கிடைத்த மாதிரி, அவ்வளவு எளிதாக அவரிடம் பேச முடியாது. ஆனால் அவருக்கு ஒருவர் நெற்றியில் பொட்டு வைக்கிறார் என்றால் அது பெரிய விஷயம்.


 
 
முதல்வர் ஜெயலலிதாவை ஒருவர் சந்திக்கிறார் என்றால் அவர்களுக்கு இடையே இடைவெளி அதிகமாகவே இருக்கும். முதல்வரை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்தோ, பொன்னாடையோ, பரிசுப்பொருளோ எது கொடுத்தாலும் இருந்தாலும் அந்த இடைவெளி மட்டும் மாறாது.
 
முதல்வரிடம் கை குலுக்குவது அதைவிட அரிதான விஷயம். அவரிடம் கை குலுக்கியவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவுக்குத்தான் இருக்கும்.


 
 
ஆனால் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து தன் மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க வந்த ஒருவர் ஜெயலலிதாவின் நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறார். யார் அந்த அதிர்ஷ்டசாலி என்றால், தமிழக ஆளுநர் ரோசய்யாவின் மருமகள் தான். ஆளுநர் ரோசய்யாவின் மகன் ஶ்ரீமன் நாராயணமூர்த்தியும் அவரது மனைவியும் முதல்வரை சந்தித்து அவர்கள் இல்ல திருமண விழாவிற்கு அழைப்பிதழ் வைத்தனர்.
 
இந்த சந்திப்பின் போது ஜெயலலிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார், ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி. முதல்வர் ஜெயலலிதாவும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
 
ஆளுநர் ரோசய்யா மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் முதவர் ஜெயலலிதா இந்த அளவுக்கு நெருக்கமாக இருப்பதற்குக் காரணம், அதிமுக அரசுடன் ஆளுநர் ரோசய்யா இணக்கமாக செயல்படுவதுதான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.