வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2016 (12:05 IST)

ரயில்வே தண்டவாளம் அருகே 2 மாணவிகள் பிணமாக மீட்பு: குடியாத்தில் பரபரப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 2 மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


 
குடியாத்தத்தை அடுத்துள்ள காசிகுட்டையைச் சேர்ந்தவர் மணி அவரது மகள் புனிதவல்லி.
 
19 வயதுடைய புனிதவல்லி ஜங்காலப்பள்ளி அரசு பள்ளியில், 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 
 
இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அருள் என்பவரின் மகள் சவுந்தர்யா 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு, தையல்பயிற்சி படித்து வந்தார்.
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பள்ளி முடிந்து, புனிதவல்லி வீட்டுக்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் புனிதவல்லியும், சவுந்தர்யாவும் வெளியே சென்றுள்ளனர்.
 
இரவு 10 மணி ஆகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் அவர்ளைத் தேடினர்.
 
ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இது குறித்து லத்தேரி காவல்நிலையத்தில் இரவு 11 மணியளவில் புகார் செய்தனர்.
 
இந்நிலையில், நேற்று காலை, 10.30 மணியளவில் கரசமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில், புனிதவல்லியும், சவுந்தர்யாவும் பிணமாகக் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தனர்.
 
இது குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, காட்பாடி ரயில்வே காவல்துறையினர், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெவிதித்தனர்.
 
சம்பவ இடத்திற்குச் சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலமாகக் கிடந்த அந்த இருவரிவ் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.