வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (20:21 IST)

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது கொடூரமான தாக்குதல்

கரூர் அருகே பள்ளி மாணவி காதலிக்க மறுத்ததால் 3 வாலிபர்கள் அந்த மாணவியை கொடூரமாக தாக்கியுள்ளனர்.


 

 
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை வாலிபர்கள் சிலர் தினமும் பள்ளிக்கு செல்லும் போதும், வீடு திரும்பும்போதும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த மாணவி பள்ளி விட்டு வீடு திரும்பும்போது 3 வாலிபர்கள் பைக்கில் பிந்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென்று அந்த மாணவியை கழுத்தில் கையால் தாக்கினார். மற்றொருவர் மாணவியின் வயிற்றில் குத்தினார். பின்னர் அந்த மூன்று பேரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.
 
நடுரோட்டில் வலியால் துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் வெங்கமேடு காவல் துறையில் புகார் செய்தனர். விசாரணையில் கரூரை சேர்ந்த தினகரன் என்ற வாலிபர் அந்த மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதை அந்த மாணவி ஏற்கவில்லை.  
 
அதனால் தினகரன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் (341)வழிமறித்தல், (294பி) ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், (323) காயம் ஏற்படுத்துதல், (506) கொலை மிரட்டல், பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.