செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2016 (16:24 IST)

புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


 


தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
 
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரிடமிருந்து சில லட்சம் பணங்கள் மற்றும் தங்க நகைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் சிபிஐ போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ராம் மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.
 
ஊழல் புகாரில் சிக்கிய ராம் மோகன் ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
இந்நிலையில், தற்போது தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர் அளிக்கப்பட்டு தலைமைச் செயலாளராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
 
இவர் 1981ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானவர்.  அதன்பின் தமிழகத்தில் மேலும், சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதவி வகித்தவர். மேலும் இவர் நிதித்துறையில் அதிக அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.