1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (23:49 IST)

ஜாமீனுக்காக காத்திருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

நெல்லையில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்னாள் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்றத்தில் ஜாமினுக்காக காத்துள்ளார்.
 
திருநெல்வேலியில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதற்கு, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர்தான் காரணம் என புகார் கூறப்பட்டது. ஆனால், இந்த புகாரை அவர்கள் இருவரும் மறுத்தனர்.
 
இதனையடுத்து, நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில், ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
 
அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இருமுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது, மூன்றாவது முறையாக அவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.