வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (12:03 IST)

திமுக முன்னாள் அமைச்சரின் தோட்டத்தில் இருந்த சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பண்ணை வீட்டு தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர்.


 

 
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமாக, ஏலகிரி மலை  மஞ்சக் கொல்லை புதூர் என்ற பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. 
 
இந்த பண்ணை வீட்டில், அரிய வகை மரங்களை அவர் வளர்த்து வருகின்றார். தோட்டத்தின் இரவு நேர பாதுகாப்பு பணிக்காக, பொன்னேரியைச் சேர்ந்த துரை என்பவர் நிமிக்கப்பட்டுள்ளார். மேலும், தோட்டத்தின் பாதுகாப்பு கருதி, பெரிய அளவில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இரவு நேர காவலர் துரை தோட்டத்தை வழக்கம் போல் சுற்றிவந்து பார்த்தபோது, பல லட்சம் மதிப்புள்ள 4 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்றது தெரிய வந்தது.
 
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பத்தூர் வனத்துறை வனவர் பரமசிவத்திடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வனத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் செம்மரம் கடத்தல் நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவமும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.