வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (09:44 IST)

வெள்ளச் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதி வழங்கப்படும்: மத்திய அரசு

தமிழகத்தில் வெள்ளச் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க விரைவில் மத்திய ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .


 

 
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஜெயலலிதா 500 கோடி ரூபாய் ஒதுக்கி ஏற்கனவே ஆணையிட்டுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கப்படுவதுடன் வெள்ளச் சீரமைப்பு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளச் சேத நிவாரணம் மற்றும் சீரமைப்புகளுக்கான தேவை முதற்கட்டமாக 8,481 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
 
இத்தொகை மாநிலஅரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும், பிரதமரை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். 
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடிதமும், வெள்ளச்சேத அறிக்கையும் பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசு உடனடி நிதி உதவியாக 939.63 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு விடுவித்து உத்தர விட்டுள்ளது.
 
மேலும், வெள்ளச்சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க விரைவில் மத்திய ஆய்வு குழுவையும் தமிழகத்திற்கு அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நேற்று மீண்டும் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.