வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (16:41 IST)

விரல் ரேகை மோசடி - 48 மணி நேரத்தில் சார்-பதிவாளரை கைது செய்ய உத்தரவு

முறைகேடாக பத்திரப் பதிவில் ஈடுபட்ட சார்-பதிவாளரை 48 மணி நேரத்தில் கைது செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சுபிதா (40) என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், தனது தந்தைக்கு சொந்தமான சென்னை, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் உள்ளது என்றும், அவர் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரது கை விரல் ரேகையை பதிவு செய்து, அவரது சொத்துகள் அனைத்தையும் அபகரித்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனது தாயார் மாரியம்மாள் மற்றும் சகோதரர் சக்திகுமார் ஆகியோரின் சதிச்செயலுக்கு நீலாங்கரை சார் பதிவாளர் உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது தந்தையை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லாமல், அவர்களது பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துகொண்டு, சக்திகுமாரை காவல் துறையினர் கைது செய்தனர். இது சிவில் வழக்கு என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சக்திகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ், ’அந்த பத்திரப்பதிவு இறந்தவரின் வீட்டில் வைத்து நடந்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சார்-பதிவாளரை 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய போலீசாருக்கு வாய்மொழியாக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.