வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (09:46 IST)

விவசாயி தற்கொலை: நிதி நிறுவன ஊழியர்களை கைது செய்யக்கோரி மனு

விவசாயி தற்கொலை: நிதி நிறுவன ஊழியர்களை கைது செய்யக்கோரி மனு

அரியலூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய நிதி நிறுவன ஊழியர்களை கைது செய்யக்கோரி விவசாய சங்கத்தினருடன் சேர்ந்து அவரது குடும்பத்தினர் காவல்துறையிரிடம் மனு கொடுத்தனர்.


 

 
அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் அழகர். விவசாயியான இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் வாங்க கடன்  பெற்றார்.
 
இந்த கடனை திருப்பி செலுத்த தவறியதாகக் கூறி, அந்நிறுவன ஊழியர்கள் அவரை தாக்கினர். இதனால், மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அரியலூர் மாவட்ட விவசாயிகள், அந்த தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
 
அதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அரியலூர் அண்ணா சிலை அருகே  திரண்டனர்.
 
அத்துடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயி அழகரின் தந்தை ஆறுமுகம், தாய் தெய்வமணி, சகோதரர்கள் பாக்யராஜ், சிலம்பரசன் மற்றும் பெரியப்பா தங்கராசு உள்ளிட்ட உறவினர்களும் அங்கு வந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அரியலூர் அண்ணா சிலை அருகில் இருந்து கழுத்தில் சுருக்கு கயிற்றினை மாட்டியபடி விவசாய சங்கத்தினர் மற்றும் அழகரின் குடும்பத்தினர் அரியலூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்து சென்றனர்.
 
பின்னர், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாய சங்கத்தினருடன் சேர்ந்து அழகரின் தந்தை ஆறுமுகம் புகார் மனு அளித்தார். 
 
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
 
எனது மகன் விவசாயி அழகர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று விவசாய பயன்பாட்டுக்காக டிராக்டர் வாங்கினார்.
 
இந்நிலையில், கடன் பணத்தை வசூல் செய்வதற்காக அந்நிறுவன மேலாளர்மற்றும் ஊழியர்கள் கடந்த 10 ஆம் தேதி வந்தனர்.
 
அவர்களில் சிலர் காவலர்கள் என கூறிக்கொண்டு பாக்கித் தொகையை செலுத்துமாறு கூறி மிரட்டினர். பின்னர் அழகரை டிராக்டரில் வி.கைகாட்டி நால் ரோட்டிற்கு அழைத்து சென்றனர்.
 
அப்போது அங்கு வந்த அழகரை டிராக்டரில் இருந்து இறக்கி விட்டு தாக்கி அந்த நிறுவன ஊழியர்கள் அவமானப்படுத்தினர்.
 
இதனால் மனமுடைந்த எனது மகன் அழகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே எனது மகனை தற்கொலைக்கு தூண்டிய அந்நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 
 
இந்த மனுவை பெற்று கொண்ட அரியலூர் மாவட்ட காவல்துறையினர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் அங்கிருந்து அமைதியாக திருப்பிச் சென்றனர்.