1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 4 மே 2015 (18:39 IST)

சென்னை மீனவர்களை உடனே விடுதலை செய்ய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை

சென்னையில் குடியிப்பு கேட்டு போராட்டம் நடத்திய மீனவர்களை காவல்துறையினர் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
 
சென்னையில் உள்ள நொச்சிகுப்பம் மற்றும் திருவல்லிக்கேணி அயோத்தியாகுப்பம் பகுதியில் காலம் காலமாக மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவர்கள் குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய குடியிருப்புகள் கட்டுவதாக கூறி அவர்கள் வசித்து வந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கி எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. 
 
ஆனால், அவர்களுக்கு இது வரை புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த நடவடிக்கையை கண்டித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் காமராஜர் சாலையில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று கூடி, திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். 
 
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.