வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (10:51 IST)

திமுக கட்சியே அல்ல கம்பெனி - எடப்பாடி பழனிச்சாமி விளாசல்

தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு எதிராக மாநிலம் முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 
இந்தியா வந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஈழப்போரின் போது இந்தியா அரசு இலங்கைக்கு உதவிகள் செய்ததாகப் பேட்டியளித்தார். இதை முன்னிட்டு அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் – தி.மு.க கூட்டணிக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அ.தி.மு.க அறிவித்திருந்தது.
 
அறிவித்தப்படி நேற்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதில் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி கலந்துகொண்டு பேசியதாவது:
 
இலங்கையில் நடைபெற்ற போரின் போது இலங்கைத் தமிழ் மக்கள் எண்ணிலடங்கா துன்பத்திற்கு ஆளானார்கள். கருணாநிதி போர் நிறுத்தப்பட்டு விட்டது என அறிவித்ததை நம்பி மக்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியெ வந்தனர். அந்த நேரத்தில் விமானம் மூலம் குண்டு பொழிந்து மக்களை கொன்று குவித்தார் ராஜபக்சே. எனவே அதற்குத் துணை போன கருணாநிதி மற்றும் ஸ்டாலினைக் கண்டிக்கும் விதமாகவே இந்த பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் இருவரையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் என பேசினார்.
 
ஸ்டாலின் குறித்தும் தி.மு.க குறித்தும் கடுமையாக விமர்சித்த அவர் ’செயல்பட முடியாத ஸ்டாலினை செயல் தலைவராக தி.மு.க.வினர் நியமித்துள்ளனர். நானும் அவரும் 1989-ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனோம். அவர் அவரது தந்தையின் மூலம் வென்றார். நான் எனது உழைப்பால் வென்றேன். அ.தி.மு.க.வில் கட்சிக்கு விஸ்வாசமாக உழைத்தால் முன்னேறலாம். ஆனால் தி.மு.க.வில் வாரிசுகள் மட்டுமே பதவியில் அமர முடியும். ஏனென்றால் அது கட்சி அல்ல கம்பெனி. ஸ்டாலின் முதல்வர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரால் எப்போதுமே முதல்வராக முடியாது. அவர் அடிக்கடி லண்டன் சென்று வருகிறார் அது எதற்காக என்றுதான் தெரியவில்லை’ எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.