வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (12:55 IST)

ஞான பழத்திற்காக மோடியை சுற்றி வரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் நிலை அதள பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்று மண்ணை கவ்வியுள்ள நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கவலைக்கிடமாக உள்ளது.

அதனால் இப்போதே மாவட்ட, வார்டு பொறுப்பாளர்களை சந்தித்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டனர். ஆனால் பொறுப்பாளர்களோ அவர்களுடைய ஆதரவு அமைச்சர்களை அரியாசனம் ஏற வைப்பதில் குறியாக இருக்கின்றனர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் தவிர முதலமைச்சர் ஆசையில் வேறு சில அமைச்சர்களும் தங்கள் ஆதரவாளர்களை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இது எடப்பாடியாருக்கும், பன்னீர்செல்வத்திற்குமே பெரிய ஆபத்தாக முடிய வாய்ப்புகள் இருக்கிறது. ”நம்ம பங்காளி சண்டையை அப்புறம் வெச்சிக்குவோம். முதல்ல இவங்கள அடக்கி வைப்போம்” என இருவரும் சேர்ந்து பொறுப்பாளர்கள் சந்திப்பு, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என நான்கு, ஐந்து நிபந்தனைகளை போட்டு வாயை மூடி வைத்திருக்கிறார்கள்.

இப்போது முதலமைச்சர் பதவி என்ற ஞானபழத்தை பெறுவதற்காக இருவரும் மோடியை குறி வைத்திருக்கிறார்கள். நாளை நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லும் முதல்வர் பழனிசாமி பிரதமரை தனியாக சந்தித்து பேச சிறப்பு அனுமதி வாங்கி வைத்திருக்கிறாராம். இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசியலில் மாறுதல்கள் தெரியலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.