திருப்பூரில் ஆறு வயது சிறுவனை கல்லால் தாக்கி கொலை செய்த மாணவன் கைது
திருப்பூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் ஆறு வயது சிறுவன் சிவராமனை கல்லால் தாக்கி கொலை செய்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வரும் சிவராமன் என்ற ஆறு வயது சிறுவன், நேற்று பள்ளி கழிப்பறையில், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ஆசிரியர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலிசார் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் அந்த சிறுவனை 6ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கழிப்பறையில், கல்லால் தாக்கியல்தான் அச்சிறுவன் இறந்து போனான் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிவராமனுக்கும் 6ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அதன்பின், அந்த 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சிவராமன் கழிப்பறைக்கு செல்லும் போது பின்னாலேயே சென்று கல்லால் தலையில் பலமாக அடித்துள்ளான்.
அதில் பலத்த காயம் அடைந்த அச்சிறுவன், ரத்தவெள்ளத்தில் மயங்கி கழிப்பறையிலேயே கிடந்துள்ளான். அதிக ரத்தம் வெளியானதால் அச்சிறுவன் இறந்து போயுள்ளான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிவராமனை தாக்கிய ஆறாம் வகுப்பு மாணவனை போலிசார் கைதுசெய்துள்ளனர்.