வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (20:12 IST)

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - பொதுச்செயலாளர் பதவி நீடிக்குமா?

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அதிமுக எம்.பி.மைத்ரேயன் கொடுத்த புகார் மனுவிற்கு பதிலளிக்குமாறு சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் பெங்களூர் சிறை முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஓ.பி.எஸ் பக்கம் சென்றார். மேலும், சசிகலாவை அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் எழுதினார். இது தொடர்பாக அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவும் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியிருந்தார்.  
 
அந்நிலையில், ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை அடுத்து, ஓ.பிஎஸ் ஆதரவு அதிமுக எம்.பிக்கள் மைத்ரேயன் தலைமையில் நேற்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். 
 
இந்நிலையில், இது குறித்து வருகிற 28ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா தற்போது பெங்களூர் சிறையில் இருப்பதால், அந்த முகவரிக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
சசிகலா தரப்பு விளக்கம் தேர்தல் ஆணையத்திற்கு திருப்தி அளிக்கவில்லை எனில், சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இதன் மூலம், அவர் பொதுச்செயலாளராக அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் செல்லாததாகி விடும்., ஓபிஎஸ் அணி எளிதாக கட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது..