வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2017 (11:10 IST)

ஆளுநரை மீண்டும் ஏன் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?

சசிகலா சார்பில் முதல்வராக முன்னிருத்தப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி 3வது முறையாக மீண்டும் ஆளுநரை சந்திக்க தற்போது செல்ல இருக்கிறார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு பாதகமாக தீர்ப்பு வந்தவுடன், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எம்.ல்.ஏக்களின் ஆதரவு கடிதமும், ஆளுநரிடம் கடந்த 14ம் தேதி கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
 
எனவே, நேற்று எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது,  ‘விரைவில் உங்களை அழைக்கிறேன்’என கூறி வித்யாசாகர் ராவ் அவரை அனுப்பிவிட்டார். அதன் பின்னர் ஆளுநரிடமிருந்து அழைப்பு வரும் என எடப்பாடி தரப்பு எதிர்பார்த்தது. நேற்று மாலை வரை ஆளுநர் அழைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக ஒரு நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது.
 
இந்நிலையில், இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டார். எனவே, இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகை நேரம் ஒதுக்கியது.  
 
எனவே, அவரை சந்திப்பதற்காக, எடப்பாடி கூவத்தூரிலிருந்து புறப்பட்டுள்ளார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் உடன் செல்கின்றனர்.

இந்த சந்திப்பில், தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் படி அவர் மீண்டும் ஆளுநரை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது..