வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2017 (14:48 IST)

முதல்வர் பதவியை விட்டு தர முடியாது - எடப்பாடி பழனிச்சாமி கறார்?

தனது முதல்வர் பதவியை விட்டுத் தர எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு விருப்பமில்லை எனத் தெரிகிறது.


 

 
அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று இரவு கூடிய கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்க இருக்கிறோம் என அதிரடியாக முடிவெடுத்தனர். மேலும், ஓ.பி.எஸ் அணியோடு பேச்சு வார்த்தை நடத்தி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என கூறினர். தினகரனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் திரும்பியிருப்பது, அதிமுகவில் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
 
விரைவில், ஓ.பி.எஸ் அணியினரிடம் பேச்சு வார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. மேலும், ஓ.பி.எஸ்-ற்கு மீண்டும் முதல்வர் பதவி அளிக்கப்படும் என செய்தி வெளியானது. சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பது ஓ.பி.எஸ் அணியின் முதல் நிபந்தனை. அது நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் முதல்வராக நீடிப்பார், மேலும், ஓ.பி.எஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியாராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை. 
 
அதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தனது முதல்வர் பதவியை விட்டுத்தர எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு விருப்பமில்லை எனத் தெரிகிறது. அதேபோல், இப்போதுள்ள அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் எடப்பாடி அரசு விரும்பவில்லை என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கே இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார் எனத் தெரிகிறது. முக்கியமாக, பாஜகவின் ஆதரவும் தனக்கு இருப்பதாக அவர் நம்புகிறார். காரணம், கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க, எடப்பாடி பழனிச்சாமியை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே, பாஜக தற்போது தனக்கே ஆதரவு அளிக்கும் என எடப்பாடி தரப்பு திடமாக நம்புகிறது. 
 
எனவே இரு அணிகளின் பேச்சு வார்த்தையின் போதும், முதல்வர் யார், அமைச்சரவையில் மாற்றம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...