செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:10 IST)

இதய தெய்வம், இதய தெய்வமென்று சொன்னீர்களே! விசுவாசம் இருக்கா? - கொந்தளிக்கும் டி.ஆர்.

இதய தெய்வம் இதய தெய்வம் என்று சொன்னீர்களே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 3ல் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்காவது விசுவாசம் இருக்கிறதா என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ”ஓ.பன்னீர்செல்வத்துக்காக மக்கள் ஓட்டு போடவில்லை. ஜெயலலிதாவுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள். ஒ.பன்னீர்செல்வத்தை தள்ளிவிட்டுவிட்டு அவசர அவசரமாக முதலமைச்சராக வரவேண்டிய அவசியம் என்ன?
 
சசிகலாதான் முதல் அமைச்சர் என்று கூறுவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை விசயமே பெரிய நாவல். அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே மக்களின் ஆவல். 
 
ஜெயலலிதா அம்மையாருக்கு எதிரான ஒரு போக்கை இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஆனதை மக்களால் ஜீரணிக்க முடியாமல் ஜீரணிச்சிட்டாங்க. இவர்தான் முதல்வர் என்று சொல்வதை மக்களால் ஜீரணிக்கவே முடியாது.
 
ஜெயலலிதாவோட போட்டோவை சட்டைப் பையில் வைத்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், இதய தெய்வம் இதய தெய்வம் என்று சொன்னீர்களே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 3ல் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்காவது ஒரு உணர்வு இருக்காதாய்யா, ஒரு விசுவாசம் இருக்கிறதா?” என்று கூறியுள்ளார்.