வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 14 செப்டம்பர் 2014 (13:43 IST)

நெல்லை வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பு ஆபரேஷன் மூலம் அகற்றம்

வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பை, ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அகற்றினர். அந்த வாலிபருக்கு பெருங்குடல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கத்துரை. அவருடைய மகன் பாலகிருஷ்ணன் (26). வாய் பேச முடியாத, கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி. பாலகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் வேலைக்கும் செல்லவில்லை.
 
காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவாராம். சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். 4 நாட்களுக்கு முன்பு பகலில் சிலருடன் ஊர் சுற்றிவிட்டு, இரவில் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அன்று முழுவதும் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். அவருடைய தாயார் பத்திரம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் என்னவென்று விசாரித்துள்ளனர். வாய் பேச முடியாதவர் என்பதால், எதையும் அவரால் சொல்ல முடியவில்லை. 
 
மறுநாள் காலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, வயிற்றில் கட்டி போன்று ஏதோ ஒரு பொருள் இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர்.
 
மாலையில் அந்த மருத்துவமனையில் இருந்து பாலகிருஷ்ணனை அழைத்து வந்துவிட்டனர். அதன்பின்பு அவருக்கு வயிற்றுவலி அதிகமாகிவிட்டது. சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார். சாப்பிடவும் இல்லை. எனவே அவரை லெவிஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, பாலகிருஷ்ணன் வயிற்றில் இருக்கும் பொருளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கி, 2 மணி நேரம் நடந்தது. அதன் பின்பு டாக்டர்கள் தெரிவித்த கருத்துகள், பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
 
அதாவது, பாலகிருஷ்ணன் வயிற்றில் கட்டியோ, உணவுப் பொருட்களோ இல்லை. பெண்கள் அணியும் செருப்பு ஒன்று அவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது தெரியவந்தது.
 
அது அவரது வயிற்றுக்குள் சென்றது எப்படி? என்பது குறித்து டாக்டர் பி.தமிழரசு கூறுகையில், "வயிற்று வீக்கம், கடுமையான வயிற்று வலியாலும் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது, வயிற்றில் கட்டி போன்று இனம்காண முடியாத பொருள் இருந்ததை அறிந்தோம்.
 
மயக்க மருந்து கொடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், வயிற்றில் செருப்பு இருந்தது தெரியவந்தது. ஆசனவாய் வழியாக அந்த செருப்பை திணித்து இருக்கிறார்கள். அது பெருங்குடலை சென்றடைந்ததால், பெருங்குடலில் ஓட்டை விழுந்துவிட்டது. இதனால் பெருங்குடல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்" என்றார்.
 
பாலகிருஷ்ணனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து, ஆசனவாய் மூலம் செருப்பை திணித்தது குறித்து அவருடைய குடும்பத்தினர், கூடங்குளம் காவல்துறையில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.