வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 6 மே 2015 (10:13 IST)

திமுக பிரமுகர் வீட்டில் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் மர்ம நபர்கள், வீடு புகுந்து தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
 
திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். அவருக்கு வயது 64. இவர் 3 ஆவது வார்டு திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.
 
இவரது மனைவி சாரதாம்பாள். அவருக்கு வயது 52. அந்தி தம்பதியினருக்கு 28 வயதுடைய ஷோபனா என்ற மகளும், நவீந்திரன் என்ற 26 மகனும் இருந்தனர்.
 
நவீந்தரன் 1 ஆவது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இந்நிலையில், சிவசுப்பிரமணியத்தின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், இரும்புக் கம்பியால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். 
 
இதனால் அவர்கள் அலறித்துடித்தனர். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, சிவசுப்பிரமணியம், சாரதாம்பாள் ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். மகன் நவீந்திரன் கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. 
 
இது குறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நவீந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் நவீந்திரன் உயிரிழந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டார். மேலும் பலத்த காயமடைந்த ஷோபனா திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது:-
 
இவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில், நகைகள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது, இது கொள்ளை முயற்சிக்காக நடைபெற்ற கொலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
 
மேலும், இவர்களது கார் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார். எனவே, தனிப்படை அமைத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். என்று தெரிவித்தனர்.
 
இது குறித்து, அனுப்பர்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.