வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (13:55 IST)

கலைஞரின் கையசைப்பை பார்க்காமல் செல்ல மாட்டோம்...

திமுக தலைவர் கருணாநிதியை பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என காவிரி மருத்துவமனை அருகே கூடியிருக்கும் திமுக தொண்டர்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
உடல் நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக  தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில்தான் நேற்று இரவு அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானது என்கிற செய்தி வெளியானது. எனவே, ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். மேலும், எழுகவே... தலைவர் கலைஞர் எழுகவே... எழுந்து வா.. எழுந்து வா.. தலைவர் கலைஞர் எழுந்து வா.. என அவர்கள் முழக்கம் எழுப்பி வந்தனர்.
 
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் கருணாநிதியின் உடல் நிலை சீரானது. எனவே, தொண்டர்கள் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், பல தீவிர திமுக தொண்டர்கள் கலைஞர் வெளியே வருவார் தங்களை பார்த்து கையசைப்பார் என விடிய விடிய காத்துக்கிடக்கின்றனர். தற்போது வரைக்கும் இதே நிலை நீடிக்கிறது.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தொண்டர்கள் சிலர் “ எங்கள் தலைவர் வெளியே வந்து எங்களை பார்த்து கை அசைக்கும் வரை இங்கேயேதான் இருப்போம். வீட்டிற்கு செல்ல மாட்டோம். அரசியலில் பல தலைவர்கள் இருந்தாலும், கலைஞரைப் போல் ஒரு தலைவர் கிடையாது. அவர்தான் எங்களுக்கு எல்லாம். அவரின் சிரித்த முகத்தை பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம். அது எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை” என அவர்கள் தெரிவித்தனர்.
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது அதிமுக தொண்டர்கள் பலர் மருத்துவமனை வாசலிலேயே பல நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.