வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (16:25 IST)

மெட்ரோ ரயிலில் உடன் பயணித்தவரை ’பளார்’ விட்ட மு.க.ஸ்டாலின்? (வீடியோ இணைப்பு)

சென்னை மெட்ரோ ரயிலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் செய்தபோது, சக பயணியை கன்னத்தில் அறைந்ததை போன்ற வீடியோ, போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 

 
சென்னையில், ஆலந்தூர்-கோயம்பேடு இடையே முதல் கட்டமாக, மெட்ரோ ரயில் இயக்கம் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்ற அடிப்படையிலும், மெட்ரோ ரயிலின் வசதிகள் குறித்து அறியவும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலந்தூர்-கோயம்பேடு இடையே பயணம் செய்தார்.
 
முதல்வர் ஜெயலலிதாவே, இந்த திட்டத்தை நேரில் வந்து தொடங்கி வைக்காமல் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில், மு.க.ஸ்டாலின் நேரில் சென்றதால் ஊடகங்கள் அதை மிகவும் முன்னிலைப்படுத்தி செய்தியாக காண்பித்தன. சில டிவி சேனல்கள் அவர் பயணத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன.
 
மெட்ரோ ரயிலில் நின்று கொண்டே பயணித்த ஸ்டாலினுக்கு, உட்கார்ந்திருந்த பயணிகள் பலரும் அமரும்படி இடம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் அவற்றை மறுத்த ஸ்டாலின், அவர்களை அமரச் செய்துவிட்டு மெட்ரோ பயண அனுபவம் குறித்து கேட்டறிந்தார்.
 
அப்போது, 'தளபதி ஸ்டாலின் வாழ்க' என்று உடன் பயணித்த திமுக தொண்டர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். இந்நிலையில், ஸ்டாலின் அருகே நெருக்கமாக நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை ஸ்டாலினுடன் வந்த திமுகவினர் தள்ளிப்போகுமாறு கூறினர். அவர் சற்று தயங்கியபோது, ஸ்டாலின் அந்த இளைஞரின் கன்னத்தில் தனது கையால் ’பளார்’ என அறைந்து, தள்ளிப்போகுமாறு கூறுவது போல வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த இளைஞரும் திமுக தொண்டர்தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பொது இடத்தில் அவரை கன்னத்தில் அடித்த செயல் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

 
அதிமுக ஆதரவு சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினை கடுமையாக கண்டித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. திமுக தரப்பில் கேட்டபோது, அந்த இளைஞர் மது குடித்துவிட்டு தகராறு செய்ததால், ஸ்டாலின் கண்டித்து அனுப்பியதாக பதில் கிடைத்தது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.