வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (12:40 IST)

திமுக கூட்டணி முடிவானது; வேட்பாளர் தேர்வு தீவிரம் – போட்டி போடும் வாரிசுகள் !

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறும் என்பது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி வந்தபோதே முடிவாயிற்று. அதன் பின் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் முன்னேற்றக்கழகம்மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்டக் கட்சிகளும் இணைய ஆரம்பித்தன. இடையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது.

இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் முனைப்புக் காட்டியது திமுக. ஏற்கனவே காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியதாக அறிவித்தது. அதையடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதையடுத்து மதிமுகவுக்கு 1 மக்களவை சீட் மற்றும் 1 மாநிலங்களவை சீட் என ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லீம் லிக்கிற்கு ஒரு தொகுதியும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. மேலும் கொங்கு ஈஸ்வரனுக்கு 1 தொகுதியும் பாரிவேந்தருக்கு 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளது திமுக.

இதையடுத்து கூட்டணி உறுதியடைந்துள்ள நிலையில் இப்போது கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் பல தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர். திமுக உயர்நிலைசெயல்திட்டக் குழு உறுப்பினர்களான க.பொன்முடி தனது மகன்கவுதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சித் தொகுதியை கேட்டுள்ளார். அதுபோல எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு திருவண்ணாமலை தொகுதியையும் கேட்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியனும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக போட்டியிட இருக்கும் பெரும்பாலான தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளேப் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.