வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (08:45 IST)

ஏன் ராகுல் – ஸ்டாலின் விளக்கம்!

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் ஸ்டாலின் அதில் தவறு ஒன்றும் இல்லை எனவும் மாநிலக் கட்சிகள் அதை எதிர்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த ராகுல் மற்றும் சோனியா காந்தி முன்னிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து ‘ ராகுலே வருக, நல்லாட்சி தருக’ எனப் புகழ்பாடினார். இது காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்பை உருவாக்கியது.

சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் இதனை வழிமொழிய மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் இன்னும் சில வடமாநிலக் கட்சிகளுக்கு இது உவப்பானதாக இல்லை. அதனால் கூட்டணிக்குள் இருவேறு கருத்துகள் நிலவி வந்தன.

இது தொடர்பாக பேசிய மம்தா ‘அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் பிரதமர் வேட்பாளர் தொடர்பாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை. அதற்கு, இது சரியான நேரமும் இல்லை. தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாக இணைந்துள்ளோம். அப்படி இருக்க, தனியாக யாரும் எந்த முடிவையும் எடுக்க முடியாது’ என ஸ்டாலினின் கருத்துக்கு பதில் கூறினார்.

இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்ததாகவும் , கூட்டணி தேர்தல் வரை நிலைக்குமா என்ற சந்தேகமும் உருவானது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்டாலின் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் ‘மாற்றம் வேண்டுமென்றுதான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தோம். அதில் என்ன தவறு? நாங்கள் முன்மொழிந்தது தவறு என்று யாராவது(கூட்டணிக் கட்சித் தலைவர்கள்) சொன்னார்களா? ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அரசியல் பிரச்சினைகள், சங்கடங்களை சரிசெய்துகொண்டு பின்பு முடிவு செய்யலாம் என்றுதான் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நினைக்கிறார்கள். ராகுல் காந்தி வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. தற்போது வேண்டாம் என்றுதான் கூறுகின்றனர். தமிழகத்தில் எப்படி பாஜகவை தலைதூக்கவிடாமல் செய்தோமோ அதுபோல, அனைவரையும் ஒன்றுதிரட்டி இந்தியாவில் பாஜகவின் வாசனையே இல்லாமல் செய்வோம்’ எனக் கூறியிருக்கிறார்.