1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2017 (17:46 IST)

ஓய்வறியா சூரியனுக்கு வைர விழா!

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை (ஜூன் 3) நடைபெற உள்ளது. இந்த வைர விழா கொண்டாட்டத்துக்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலரும் வருகை தர உள்ளனர். ஆனால் வைர விழா நாயகர் பணி செய்த களைப்பால் உடல் நலம் குன்றி ஓய்வறியாமல் ஓய்வில் உள்ளார்.


 
 
தனது 94-வது அகவையில் நாளை அடியெடுத்து வைக்கும் கருணாநிதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோரால் தட்சணாமூர்த்தி என பெயரிடப்பட்ட இவர் இன்று அனைவராலும் அறியப்படும் கலைஞர் கருணாநிதியாய் உதயமாகியுள்ளார்.
 
கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை நடிகவேல் எம்.ஆர்.ராதா அளித்தார். கருணாநிதி என்ற பெயரும் மறைந்து கலைஞர் என்ற பெயரே அவரது பெயராகி போனது இன்று. மறைந்த முதல்வர் எம்ஜிஆரே சட்டமன்றத்தில் அவரது கட்சி உறுப்பினர் கருணாநிதி என குறிப்பிட்டதற்கு அவரை கலைஞர் என அழைக்க அறிவுறுத்தினார். இப்படி உண்மையான கலைஞராக மற்ற கட்சியினரின் அன்பை பெற்றவர் கருணாநிதி.
 
பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்த கலைஞர் தனது 14-வது அகவை முதல் தன்னை முழுமையாக சமூக இயக்கங்களில் ஈடுபடுத்திக்கொண்டார். இது தான் அவரது அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்டது. மேலும் அவர் துண்டுப்பதிப்பாக தொடங்கிய முரசொலி அவரது அரசியல் பயணத்துக்கு பெரும் பலமாக இருந்தது.


 

 
அரசியல் மட்டுமின்றி திரையுலகிலும் தனி முத்திரை பதித்தார் கருணாநிதி. ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி, பராசக்தி, பாசபறவைகள் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதினார் கலைஞர். இந்த படங்கள் அவரது வசனங்களுக்காவே ஓடிய காலம் அது.
 
எத்தனை எத்தனை புகழும் சாதனைகளையும் செய்தாலும் ஒரு மனிதன் பல விமர்சனங்களை சந்திக்காமல் வளர்ச்சி காண முடியாது. கலைஞரும் தனது அரசியல் பயணத்தில் பல விமர்சனங்களை கடந்து வந்தார்.
 
கலைஞர் சந்தித்த விமர்சனங்களில் சில,
 
1976-ஆம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் வீராணம் ஊழல் புகாரை காரணம் காட்டி அவரது தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
 
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி சர்க்காரியா கமிசனை அமல்படுத்தியதால் 1977-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். காங்கிரஸை கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அந்த கட்சி உடன் கூட்டணியை அமைத்தார். இது ஊடகங்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் தற்போது இந்த இரண்டு கட்சிகளும் உடன்பிறப்புகளை போல தமிழகத்தில் உள்ளது.


 

 
2008-2009-ல் இவரது ஆட்சியின் போது ஈழத் தமிழர் இனப் படுகொலை இலங்கையில் நடந்தது. அந்த காலகட்டத்தில் திமுகவின் கூட்டணியில் தான் மத்திய அரசு நடந்து வந்தது. ஆட்சியில் பங்கெடுத்தும் தமிழர் இன படுகொலைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பொழுதும் அதற்கு பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் கலைஞர்.
 
இத்தனை விமர்சனங்களயும் கடந்து தனது 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் தோல்வியே காணாத சட்டபை உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை எவரும் செய்திறாத இந்த அரசியல் சாதனையை செய்த ஒருவராய் கலைஞர் கருணாநிதி இருக்கிறார்.
 
60 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் ஓய்வறியாமல் உழைத்து வந்த இந்த உதய சூரியன் தற்போது உடல் நலக்குறைவால் ஓய்வில் உள்ளது. ஆனால் தற்போது உள்ள அரசியல் சூழலை சமாளிக்க கருணாநிதி நல்ல நிலையில் இல்லையே என அனைத்து தரப்பு மக்களும் கூறுகின்றனர். மதவாதத்துக்கு எதிராகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் கலைஞர் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். கலைஞரின் கொள்கை விதைகளாலே தற்போதும் தமிழகத்தில் மதவாத சக்திகளும், இந்தி திணிப்பாளர்களும் ஊடுறுவ முடியாத நிலை உள்ளது.


 

 
இந்நிலையில், நாளை பகுத்தறிவு சூரியன் தனது 94-வது பிறந்த நாளை மற்றும் சட்டசபை வைர விழாவை கொண்டாடுகிறார். திமுகவினர் இதனை பெரும் கொண்டாட்டமாக கருதுகின்றனர். உடல் நலம் குன்றினாலும் அரசியலை விட்டு சற்று விலகி இருந்தாலும் கலைஞர் ஒவ்வொரு தொண்டருக்குள்ளும் பல பகுத்தறிவு விதைகளை விதைத்திருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற்று வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.