1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (14:06 IST)

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. ரூ.25 லட்சம் நிதி: கருணாநிதி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் 25 லட்சம் ரூபாயை அளிப்பதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
 
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.
நூற்றுக் கணக்கான மக்கள் மாண்டு போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்திருக்கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்திடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, திமுக சார்பாக “பிரதமர் தேசிய நிவாரண நிதி”க்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்படுகிறது என்பதையும், இந்த நன்கொடைக்கான காசோலையினை கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாக பிரதமரிடம் நேரில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.