வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 16 டிசம்பர் 2014 (17:02 IST)

மாவட்டச் செயலாளர்கள் 10 பேரை திமுக நீக்கப் போவதாக தகவல்

திமுக உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களி்ன உள்ளடி வேலைகளால் பதவி கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டவர்களின் புகாரால் 10 மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக திமுக நீக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் திமுக உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தேர்தலில் பங்கெடுக்காதபடி புறக்கணிக்கப்பட்டதாக தமிழகம் முழுவதும் புகார் எழுந்தது.
 
இதன் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலையே நிறுத்தி வைக்க முரசொலியில் அறிவிப்பு வெளியானது. உச்சகட்டமாக, கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் அடிதடி மண்டை உடைப்பு வரை தேர்தல் தகராறு சென்றது.
 
அந்தந்த மாவட்டச் செயலாளர்களால் இவ்வாறு தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட பல நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியிடம் நேரடியாக இதை புகாராக தெரிவித்தனர். இது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு செயல்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பலர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் புகார் கூறப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமை முடிவெடுத்தது. அதன்படி தலைமைக்கும், ஸ்டாலின் தரப்பிற்கும் சில தினங்களாக நடந்துவந்து பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.
 
இது சம்பந்தப்பட்ட 10 மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்ய கருணாநிதி முடிவெடுத்து அதை இன்று அறிவிப்பதாக இருந்த நிலையில் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஸ்டாலின், கருணாநிதியிடம் கடும் வாதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
அறிவாலயத்தில் தற்போது அதுதொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தையினால் அறிவாலயம் பரப்புடன் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மாலைக்குள் குறிப்பிட்ட அந்த மாவட்டச் செயலாளர்களை நீக்கி திமுக தலைமை முடிவெடுக்கலாம் அல்லது வேறு ஏதாவது அதிரடி முடிவுகளை திமுக தலைமை அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.