வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (15:30 IST)

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் !

2019-20 நிதியாண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாளை மாலை திமுக எம்.எல்.ஏ.கள் கலந்து கொள்ளும் நாளை மாலை நடைபெற இருக்கிறது.

பாஜக அரசின் பதவிக்காலம் முடிய 100 நாட்களுக்குள்ளாகவே இருப்பதால் 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதனை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கியுள்ளதால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகை அளித்தல், வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ஆண்டுக்கு 5 லட்சமாக உயர்த்துதல் என சில சலுகைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவை ஏழை மக்கள் மற்றும் நடுத்தரமக்கள் ஆகியோர் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மத்திய பட்ஜெட்டை அடுத்து நாளை தமிழக அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இருக்கிறது. இதனை நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.மத்தியப் பட்ஜெட்டைப் போலவே தமிழக பட்ஜெட்டிலும் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்தே அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பட்ஜெட் குறித்த விவாதம் நடக்கும் தேதியும் எத்தனை நாட்கள் நடக்கும் என்ற விவரமும் வெளியாக இருக்கிறது.

நாளைப் பட்ஜெட் தாக்கலை ஒட்டி சட்டப் பேரவைக் கூட இருக்கையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ளும் கூட்டம் நாளை மாலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில் ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பிப்ரவரி 8 வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.